america லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
america லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 மார்ச், 2020

அப்(பப்)பா...

ஜோசஃப் ஒரு தோற்றுப் போன இசைக் கலைஞன். அதனாலேயே தன்னுடைய புதல்வர்கள் பெரும் இசைக் கலைஞர்களாக வர வேண்டும் என்று கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். இதற்காக ஜோஸஃப் தன் மகன்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். நடனத்தில் ஒரு அடி பிசகினாலும் பெல்ட்டால் அடித்தார். அந்தச் சிறுவர்கள் அவரைப் போலவே இசையில் அதீதமான திறமையைக் கொண்டிருந்தும் அவர் கடுமையான பயிற்சி அளித்து வந்தார்.

இசையிலும் நடனத்திலும் தான் கொடுக்கும் கடும் பயிற்சிகளுக்காக ஜோஸஃப் தன் மகன்களை மற்ற பையன்களைப் போல் விளையாட அனுமதிக்கவில்லை. ஓய்வெடுக்க விடவில்லை. இரவும் பகலும் எந்நேரமும் பயிற்சியிலேயே அவர்களை ஈடுபட வைத்தார்.


அவரது மகன்கள் நால்வரும் நடனம், பாடல் மற்றும் இசைக் கருவிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது கடைசி மகனை மட்டும் ஜோசஃப் தங்கள் பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளவில்லை. ‘நீ சிறுவன் ’ என்று சொல்லி மறுத்து விடுகிறார். அப்போது  அவன் வயது நான்கு. பிறகு ஆறு வயதில் ஆரம்பப் பாடசாலையின் பாடல் போட்டியில் அவன் முதல் பரிசு வாங்கியதும்தான் அவனையும் தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்கிறார். அதுவும் பாடகனாக அல்ல; ட்ரம்ஸ் வாசிப்பவனாக. பிறகு ஏழு வயதில்தான் மேடையில் தங்களது இசை குழுவில் பாட ஆரம்பித்தார்.

ஏழு பிள்ளைகளும் மனைவியும் சேர்ந்து மொத்தம் ஒன்பது பேருக்கு ஒரே ஒரு சிறிய அறையைக் கொண்ட வீட்டில் வாழ்ந்தபடி தன் பிள்ளைகளின் இசைப் பயிற்சிக்காகவும், பிறகு அவர்களைக் கொண்டு தான் அமைத்த  இசைக்குழுவுக்காகவும் ஒருமுறை பெரும் அளவிலான இசைச் சாதனங்களை வாங்கி வருகிறார் ஜோசஃப்.

”நீ என்ன பைத்தியமா? ” என்று கேட்டு சண்டை பிடிக்கும் மனைவியின்  ஆட்சேபணைகளை அவர் பொருட்படுத்துவதே இல்லை. அவரைப் பொறுத்தவரை, தன் குழந்தைகளின் இசைக் குழு நாடெங்கும் பிரபலமாக வேண்டும். அவருடைய கனவு  இசைக் குழு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே நிறைவேறி விடுகிறது. தாங்கள் கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்திலும் பரிசுகளைக் குவிக்கிறார்கள் ஜோஸஃபின் குழந்தைகள். 


ஒன்பது வயதிலேயே கடைசி மகனுக்கு ஒரு பிரபல பாடகனுக்குக்கு உரிய அந்தஸ்து கிடைத்து விடுகிறது. இதற்கு அவனது திறமை தவிர, ஜோஸஃபின் இடைவிடாத உழைப்பும், தன் குழந்தைகள் மீது அவர் வைத்த தீவிர நம்பிக்கையும்தான் காரணம்.

அதனால்தான் அப்போது உலக அளவில் முன்னணிப் பாடகியாக இருந்த டயானா ராஸ் ஒன்பதே வயதான அந்த சிறுவனுடன் மேடையில் ஒன்றாகப் பாடினார். அவனது வாழ்க்கையில் நடந்த அந்த மிக முக்கியமான சம்பவம் உலகின் பிரசித்தி பெற்ற இசை அரங்குகளில் ஒன்றான அப்பல்லோ தியேட்டரில் (நியூயார்க்) நடந்தது. அவர்களது இசை குழுவின் முதல் ஆல்பத்தை வெளியிட்டவரும் டயானா ராஸ் தான்.


16 வயது முதல் சோலோவாக ஆல்பம் தயாரித்து வந்தார். இவருடைய உச்சம், 1982ல் அதாவது தன் 24 வயதில் வெளியிட்ட த்ரில்லர் ஆல்பம். இன்று வரை உலகில் அதிகம் விற்கப்பட்டு கின்னஸில் இடம்பிடித்த இசை ஆல்பம். 6.5 கோடி காப்பிகள். அவருடைய அத்தனை ஆல்பங்களும் இதுவரை 20 கோடி காப்பிகள் விற்றுள்ளன (1700 கோடி ரூபாய்க்கு விற்பனை). எந்த இசைக் கலைஞனாலும் எட்ட முடியாத சாதனை இது.

தனது பிராண்ட் பெயர் மூலமாக அவர் சம்பாதித்தது 2500 கோடி ரூபாய். முக்கியமாக 1980 மற்றும் 1990களில் வருடத்துக்கு 250 கோடியை மிக எளிதாக சம்பாதித்து வந்தார். 


ஆனால் இந்த இடத்தை அடைவதற்காக அவர் இழந்தது மிகவும் அதிகம். “இரவு இரண்டு மணிக்கு என் அப்பா எங்களை எழுப்புவார். மூன்று மணிக்கு ஏதாவது ஒரு க்ளப்பில் இசை நிகழ்ச்சி இருக்கும். இப்படி எல்லா அமெரிக்க நகரங்களிலும் பாடி இருக்கிறேன். அப்போது என் வயது ஏழு இருக்கும்” என்கிறார் மைக்கேல் ஜாக்சன்.


செவ்வாய், 24 மார்ச், 2020

முதல் கலைப் பயணம்

ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக  1889-ஆம் ஆண்டு பிறந்தான் சார்லஸ்ஸ்பென்சர். அவனது தாய் ஹென்னா, லண்டன் மதுவிடுதிகளில் பாட்டுப் பாடும் பெண்.

இசை நிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். ஒரு நாள்மேடையில் பாடும்போது அவன் அம்மாவிற்குத் தொண்டையில் பிரச்னை; அவளால் பாட முடியவில்லை! அதனால் ரசிகர்கள் ஒரே கூச்சலிட்டனர்! அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள், ஹென்னா.


அப்போது ஆறு வயது சிறுவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை உடனே வேகமாக மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் அப்போது தெரிந்திருக்காது!

தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான். ரசிகர்களின் விசில் சத்தத்தாலும், கைத்தட்டலாலும் அரங்கமே அதிர்ந்தது! மேடையை நோக்கிச் சில்லறைகள் சீறிப் பறந்தன. சிறுவன் உடனே பாடுவதை நிறுத்திவிட்டுச் சில்லறைகளைப் பொறுக்கினான். கூட்டமோ அவனைப் பாடச் சொல்லி கூச்சலிட்டது !


ஆனால் சிறுவனோ சிறிதும் சளைக்காது ‘சிறிது நேரம் பொறுத்திருங்கள். சில்லறைகளைப் பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்; ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!’ என்று கூறிவிட்டுச் சில்லறைக்காசுகளைப் பொறுக்கத் தொடங்கினான். கூட்டத்தினர் சிரித்தனர். மீண்டும் மீண்டும் எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது! தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி… 

வறுமை, பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் பள்ளிகளில் நடக்கும் நாடகம், நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரையும் அவன் சம்பாதிக்கத் தவறவில்லை! அவன் சார்ந்த நடன, நாடகக்குழு அமெரிக்காவிற்குப் போகும் வாய்ப்பு வந்தது. அங்கு அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை நோக்கி, ‘ஏய்!அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான்... வந்துகொண்டிருக்கிறான்!’ என்று தன்னை மறந்து கத்தினான்.


அடுத்த ஐந்தாண்டுகளில் அவன் கூறியதே நடந்தது. அவன் அமெரிக்காவை மட்டுமல்லாது இந்த உலகத்தையே கொள்ளையடித்தான்.

ஒரு நாள் நடிக்க வாய்ப்புக் கேட்ட அவனை பார்த்து சென்னட் என்ற தயாரிப்பாளர் “ஏதாவது நடித்துக்காட்டு” என்று கூறினார். அவனின் உடல் வாகுக்கு ஏற்ற உடைகள் அங்கு இல்லை என்பதால், பெரிய அளவுள்ள தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை,ஷு, தொப்பி, கைத்தடி. ஆகியவை கொடுக்கப்பட்டது. தனக்குக் கிடைத்ததை வாங்கி அணிந்து கொண்டார். அவரது தோற்றத்தைப் பார்த்தவுடனேயே தயாரிப்பாளருக்குச் சிரிப்பாக வந்தது. இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளின் உருவ முத்திரை!