செவ்வாய், 16 நவம்பர், 2021

வாழ்க்கையை மாற்றிய வேலை

 வட ஆஸ்திரியாவின் பிரானவ் என்ற ஊரில் அலாய்ஸ் என்பவர் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அலாய்ஸ்க்கு குடிப்பழக்கம் இருந்ததால், குடும்பத்தினர் மீது அடிமைத்தனத்தை திணித்தார். பிள்ளைகளை பெயர் சொல்லி அழைக்காமல், விசில் அடித்தால் ஓடிவந்து நிற்குமாறு உத்தரவிட்டிருந்தார். அவரைப் பார்த்தாலே குழந்தைகள் மிரண்டு போவார்கள்.

இவரது 3வது மனைவிக்கு பிறந்த 4வது மகன் மட்டும் மற்றவர்களைப் போல் இல்லாமல், பிறந்தது முதல் மிகவும் மெலிந்து, நோய்வாய்ப்பட்டு வலுவின்றி காணப்பட்டான். பின்னர் படிப்படியாக உடல் தேறியது. தந்தை அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவதால், அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தான் அந்த சிறுவன். பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெறும் அளவிற்கு நல்ல படிப்பாளி. திடீரென அவனுக்கு ஓவியத்தின் மீது நாட்டம் வந்தது. இதனால் படிப்பின் மீது ஆர்வம் குன்றியது. தனது ஓவியம் வரையும் திறமையை பட்டை தீட்டிக் கொண்டான்.



இந்த சூழலில் உடல்நலக்குறைவு காரணமாக தந்தை காலமானார். அதன் பிறகு கண்டிப்பு காட்ட யாரும் இல்லாததால், அந்த சிறுவனுக்கு முரட்டு குணம் தொற்றிக் கொண்டது. ஆசிரியர், மாணவர் என பேதம் பார்க்காமல் அனைவருடனும் சண்டையிட்டார்.

18வது வயதில் தாயிடம் சிறு தொகை வாங்கிக் கொண்டு, ஓவியராக வேண்டும் என்ற ஆசையில் வியன்னாவிற்கு ரயிலில் ஏறினார். அங்கு ‘Art Academy’ சேருவதற்கு நுழைவுத் தேர்வில் தோற்றார். அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சிக்கையில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையில் தாயும் இறந்து போக தனிமையாகிப் போனான்.

பின்னர் தனது ஓவியங்கள் மூலம் பிழைப்பு நடத்தினான். சொந்தமாக ஒரு ஓவியக்கூடம் அமைத்தான். அந்த சமயத்தில் சிந்தியா என்ற பெண்ணை காதலித்து, தோல்வியுற்றான். இந்த காலக்கட்டத்தில் நாளிதழ்களை தினமும் படிக்கும் பழக்கம் வந்தது. இதன்மூலம் அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து பிழைப்பு தேடி ஜெர்மனிக்கு சென்றான். அங்கு ஓவியத்தால் சாதிக்க முடியவில்லை. எனவே ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக எதையாவது சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து, ராணுவ வீரராக மாறினான். அந்த பணி அவன் வாழ்க்கையையும், உலக சரித்திரத்தையும் மாற்றும் என்பது அவனுக்கு அப்போது தெரியாது.

முதல் உலகப்போரில் ஜெர்மனி படையில் ஒரு சாதாரண ராணுவ வீரர், இரண்டாம் உலகப் போரில் உலகையே நடுங்க வைத்த ஜெர்மனியின் அதிபர் ஆனார். ஆம்... அவர் தான் அடால்ப் ஹிட்லர்.




ஞாயிறு, 14 நவம்பர், 2021

துறவியின் வீரம்

 ஒரு சமயம் இந்தியாவில் இருந்து துறவி ஒருவர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் துறவி வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் துறவியும், அவரது நண்பரும் துணுக்குற்றனர். மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், துறவி அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும், துறவியையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் பட, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் துரத்தியது.



அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர். அந்த துறவி அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்தவர், ”நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது” என்று முடித்தார்.

'உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும்' என்ற மன உறுதி பெற்றிருந்தவரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

அந்த இந்திய துறவி யார் என கண்டுபிடித்து விட்டீர்களா? 

உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில், எதையும் வெல்.

சுவாமி விவேகானந்தர்



மேலும் சில தகவல்கள் :

1. சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா.

2. 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். இன்று அந்தப் பாறை "விவேகானந்தர் பாறை" என அழைக்கப்பட்டு விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

3. இந்தியாவில் விவேகானந்தரின் பிறந்த தினத்தை மையமாகக் கொண்டு 1985ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகின்றது.