actor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
actor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 மார்ச், 2020

வீராதி வீரன்

இளவயதிலேயே தன் அப்பாவை போல திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் அந்த சிறுவன். ஆனால் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடு தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார். அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே ஒரு ரெஸ்டாரண்டில் சர்வராக வேலை பார்த்தார்.

அந்த காலகட்டத்தில் சீனர்கள் அல்லாதவர்களுக்கு சீன தற்காப்பு கலைகள் சொல்லிகொடுப்பது கிடையாது. அதை உடைத்து புரூஸ்லீ அனைவருக்கும் குங் ஃபூ சொல்லிக்கொடுத்தார்.
அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசிர்யர் அல்லாத நீ ஏன் குங் ஃபூ சொல்லித் தருகிறாய்?" என்று கேட்க, "கலை எல்லாருக்கும் பொதுவானது தானே" என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார்.


"அப்படியில்லை! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும்? நாமிருவரும் சண்டை போடுவோம். நான் வென்றால்  நீ குங் ஃபூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நீ வென்றால் நான் குங் ஃபூ என்கிற பெயரைக் கூட இனிமேல் உச்சரிக்க மாட்டேன்! என்னோடு சண்டையிடு" என்றார் அவர். இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங் ஃபூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார்.

ஆனால், அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்க செய்தது. தானே இன்னும் பல மாற்றங்களை செய்து Jeet Kune Do என்ற புது கலையும் அறிமுகபடுத்தினார்.


ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான். ஆனால் அவர் அமைதியாகவே இருந்தார் "ஏன் இப்படி?" என்று கேட்ட பொழுது, "நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன்!" என்று மட்டும் சொன்னார். வீரம்  என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என
உணர்ந்து  நடப்பதிலும் இருக்கிறது.

எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். தற்காப்பு கலையை திரையுலகில் அறிமுகம் செய்து அதனை உலகெங்கிலும் பரவச் செய்தார். 90களில் இவரைப் பற்றி பேசாதவர்கள் இருக்க முடியாது.

இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் லீ ஜுன்-ஃபன். அந்த பெயர் அமெரிக்க மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியரின் வாயில் நூழையவில்லை. எனவே அந்த செவிலியர் செல்லமாக புரூஸ் லீ எனக் கூப்பிட அதுவே பிறகு அவரது பெயராக நிலைபெற்றது.

செவ்வாய், 24 மார்ச், 2020

முதல் கலைப் பயணம்

ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக  1889-ஆம் ஆண்டு பிறந்தான் சார்லஸ்ஸ்பென்சர். அவனது தாய் ஹென்னா, லண்டன் மதுவிடுதிகளில் பாட்டுப் பாடும் பெண்.

இசை நிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். ஒரு நாள்மேடையில் பாடும்போது அவன் அம்மாவிற்குத் தொண்டையில் பிரச்னை; அவளால் பாட முடியவில்லை! அதனால் ரசிகர்கள் ஒரே கூச்சலிட்டனர்! அவமானம் கண்ணீராகக் கரைய மேடையை விட்டு கீழே இறங்கினாள், ஹென்னா.


அப்போது ஆறு வயது சிறுவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை உடனே வேகமாக மேடையேறினான். அது ஒரு மகா கலைஞனின் முதல் கலைப் பயணம் என்று யாருக்கும் அப்போது தெரிந்திருக்காது!

தன் அம்மா சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடி, தன் பிஞ்சு கால், கைகளை அசைத்து நடனமாடத் துவங்கினான். ரசிகர்களின் விசில் சத்தத்தாலும், கைத்தட்டலாலும் அரங்கமே அதிர்ந்தது! மேடையை நோக்கிச் சில்லறைகள் சீறிப் பறந்தன. சிறுவன் உடனே பாடுவதை நிறுத்திவிட்டுச் சில்லறைகளைப் பொறுக்கினான். கூட்டமோ அவனைப் பாடச் சொல்லி கூச்சலிட்டது !


ஆனால் சிறுவனோ சிறிதும் சளைக்காது ‘சிறிது நேரம் பொறுத்திருங்கள். சில்லறைகளைப் பொறுக்கிய பிறகுதான் பாடுவேன்; ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை என்னால் செய்ய முடியாது!’ என்று கூறிவிட்டுச் சில்லறைக்காசுகளைப் பொறுக்கத் தொடங்கினான். கூட்டத்தினர் சிரித்தனர். மீண்டும் மீண்டும் எழுந்த சிரிப்பால் வானம் அதிர்ந்தது! தன் தாய் பாடமுடியாமல் தவித்ததை நடித்துக் காட்ட மீண்டும் காது கிழியும் சிரிப்பொலி… 

வறுமை, பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் பள்ளிகளில் நடக்கும் நாடகம், நடனங்களில் தனக்கென்று ஒரு நல்ல பெயரையும் அவன் சம்பாதிக்கத் தவறவில்லை! அவன் சார்ந்த நடன, நாடகக்குழு அமெரிக்காவிற்குப் போகும் வாய்ப்பு வந்தது. அங்கு அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை நோக்கி, ‘ஏய்!அமெரிக்காவே பத்திரமாக இரு! இன்னும் கொஞ்ச நாளில் உன்னை முழுவதுமாக கொள்ளையடிக்க இங்கே ஒருவன் வருவான்... வந்துகொண்டிருக்கிறான்!’ என்று தன்னை மறந்து கத்தினான்.


அடுத்த ஐந்தாண்டுகளில் அவன் கூறியதே நடந்தது. அவன் அமெரிக்காவை மட்டுமல்லாது இந்த உலகத்தையே கொள்ளையடித்தான்.

ஒரு நாள் நடிக்க வாய்ப்புக் கேட்ட அவனை பார்த்து சென்னட் என்ற தயாரிப்பாளர் “ஏதாவது நடித்துக்காட்டு” என்று கூறினார். அவனின் உடல் வாகுக்கு ஏற்ற உடைகள் அங்கு இல்லை என்பதால், பெரிய அளவுள்ள தொள தொள பேண்ட், பொருத்தமே இல்லா சிறிய மேல் சட்டை,ஷு, தொப்பி, கைத்தடி. ஆகியவை கொடுக்கப்பட்டது. தனக்குக் கிடைத்ததை வாங்கி அணிந்து கொண்டார். அவரது தோற்றத்தைப் பார்த்தவுடனேயே தயாரிப்பாளருக்குச் சிரிப்பாக வந்தது. இப்படித்தான் உருவானது சார்லி சாப்ளின் உருவ முத்திரை!