cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 மார்ச், 2020

வீராதி வீரன்

இளவயதிலேயே தன் அப்பாவை போல திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் அந்த சிறுவன். ஆனால் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடு தொடர்ந்து வம்புக்களில் ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார். அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே ஒரு ரெஸ்டாரண்டில் சர்வராக வேலை பார்த்தார்.

அந்த காலகட்டத்தில் சீனர்கள் அல்லாதவர்களுக்கு சீன தற்காப்பு கலைகள் சொல்லிகொடுப்பது கிடையாது. அதை உடைத்து புரூஸ்லீ அனைவருக்கும் குங் ஃபூ சொல்லிக்கொடுத்தார்.
அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசிர்யர் அல்லாத நீ ஏன் குங் ஃபூ சொல்லித் தருகிறாய்?" என்று கேட்க, "கலை எல்லாருக்கும் பொதுவானது தானே" என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார்.


"அப்படியில்லை! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும்? நாமிருவரும் சண்டை போடுவோம். நான் வென்றால்  நீ குங் ஃபூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். நீ வென்றால் நான் குங் ஃபூ என்கிற பெயரைக் கூட இனிமேல் உச்சரிக்க மாட்டேன்! என்னோடு சண்டையிடு" என்றார் அவர். இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங் ஃபூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார்.

ஆனால், அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்க செய்தது. தானே இன்னும் பல மாற்றங்களை செய்து Jeet Kune Do என்ற புது கலையும் அறிமுகபடுத்தினார்.


ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான். ஆனால் அவர் அமைதியாகவே இருந்தார் "ஏன் இப்படி?" என்று கேட்ட பொழுது, "நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன்!" என்று மட்டும் சொன்னார். வீரம்  என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என
உணர்ந்து  நடப்பதிலும் இருக்கிறது.

எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். தற்காப்பு கலையை திரையுலகில் அறிமுகம் செய்து அதனை உலகெங்கிலும் பரவச் செய்தார். 90களில் இவரைப் பற்றி பேசாதவர்கள் இருக்க முடியாது.

இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் லீ ஜுன்-ஃபன். அந்த பெயர் அமெரிக்க மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியரின் வாயில் நூழையவில்லை. எனவே அந்த செவிலியர் செல்லமாக புரூஸ் லீ எனக் கூப்பிட அதுவே பிறகு அவரது பெயராக நிலைபெற்றது.

வெள்ளி, 20 மார்ச், 2020

எழுத்தாளரும்... சிகரெட்டும்...

அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். தனக்கு இருந்த நீண்ட கால புகை பழக்கத்தை நிறுத்திய விதம் பற்றி அவர் விவரித்த பதிவு இது :

"என் சிகரெட் பழக்கம்… எம்.ஐ.டி. (M.I.T) ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமை மெஸ்ஸில் டின்னர் கொடுக்கும் போது ஒரு 555 சிகரெட் தருவார்கள். அப்போதெல்லாம் அதன் விலை நாலணா. அதை நண்பனிடம் கொடுத்து அவன் புகை வளையம் விடுவதை வேடிக்கை பார்ப்பேன். ஒரு நாள் நாமே குடித்துப் பார்க்கலாமே என்று தோன்றியதில் இந்த பழக்கம் என்னோடு ஒட்டிக்கொண்டது.

சிகரெட் பழக்கம் ஒரு சனியன். லேசில் நம்மை விடாது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்னுடன் அது இருந்தது. சில சமயம் சிகரெட் பிடிப்பதற்காகவே எதையாவது சாப்பிடுவேன். கொல்லைப்புறம் போவதற்கு சிகரெட் பிடித்தாக வேண்டும்.

சாப்பிட்டவுடன் கட்டாயம் பிடிப்பேன். சிந்தனா சக்தி வேண்டும் என்று வெத்து காரணம் சொல்லி பற்றவைத்து விரலிடுக்கில் வைத்து சாம்பலை சொடுக்குவேன். இதனால் பல சுவைகளை, வாசனைகளை இழந்தேன். இவ்வாறு அது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வபோது ‘ச்சே’ என்று தோன்றி நிறுத்திவிடத் தீர்மானிப்பேன். ஒவ்வொரு புதுவருஷமும் தவறாத வைராக்கியமாக சிகரெட்டை நிறுத்துவேன். அது சில சமயம் பிப்ரவரி வரி நீடிக்கும். சில சமயம் ஜனவரி 2ம் தேதி வரை.


பெங்களூரில் ஒரு முறை செக்கப்புக்கு போனபோது டாக்டர் பரமேஸ்வரன் “நீ சிகரெட் பழக்கத்தை கைவிட வேண்டும்” என்றார்.

“ஏன்?’ என்றேன். ‘உன் ஹார்ட் சரியில்லை” என்றார். “கைவிடாவிட்டால் என்ன ஆகும்?” என்றேன். “ஹார்ட் அட்டாக்… லங் கேன்சர்.. நீதான் எத்தனையோ படிக்கிறாயே… உனக்கு சொல்ல வேண்டுமா?”

இந்த முறை பயம் வந்து விட்டது. ஞாபகம் வைத்துக் கொள்வதற்குத் தோதாக ஆகஸ்ட் பதினைந்தைத் தேர்ந்தெடுத்து அனைத்து நண்பர்களிடமும், “நான் சிகரெட்டை நிறுத்திவிட்டேன்” என்று அறிவித்தேன். இது முக்கியம். யாராவது நான் புகைபிடிப்பதை பார்த்தால் உடனே உலகத்துக்கும் மனைவி மக்களுக்கும் தகவல் சொல்லிவிடும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தினேன்.


சிகரெட் பழக்கம் என்பது பைனரி.  கைவிடுவதாக இருந்தால் முழுவதும் கைவிட வேண்டும். இருபது சிகரெட்டிலிருந்து பத்து, பத்திலிருந்து 8 என்று குறைப்பதெல்லாம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது.

 முதல் தினம் நரகம். முதல் வாரம் உபநரகம். சிகரெட் இல்லாமல் உலகமே பாழாகி இருக்கும்… இந்த இம்சை தேவையா என்ற ஏக்கத்தைச் சமாளிக்க நிறைய ஐஸ்வாட்டர்குடிக்க வேண்டும். சிகரெட்டுக்கு பதிலாக பாக்கு, பான்பராக் என்று புகையிலையின் எந்த வடிவமும் கூடாது. வேறு ஏதாவது வேலையில் கவனம் செலுத்துவது உத்தமமானது. நீங்கள் விட்டுவைத்த புல்புல்தாரா வாசிப்பது, இயற்கை காட்சிகளை வரைவது, கவிதை எழுதுவது போன்ற பயனுள்ள பொழுது போக்குகளைத் தொடரலாம்.

ஒரு வாரமானதும் பழக்கம் லேசாக வாலைச் சுருட்டிக் கொள்ளும். நாட்களை எண்ணத் துவங்கலாம். தமிழ்ப்படங்கள் போல வெற்றிகரமான பத்தாவது நாள்… இன்று பதினைந்தாவது நாள்.. சூப்பர்ஹிட் ஐந்தாவது வாரம்.. இப்படி, மெள்ள மெள்ளநண்பர்களிடம், மனைவியிடம் பீற்றிக் கொள்ளத் துவங்கலாம். போஸ்டர் கூட ஒட்டலாம். ஆனால், இந்தக் கட்டத்தில் சிகரெட் குடிக்கும் நண்பர்கள் அருகே செல்வதும் மிதப்புக்காகப் பையில் குடிக்காமல் சிகரெட் வைத்துக் கொள்வதும் விஷப் பரீட்சைகள்.

பழக்கத்தை விட்ட நாற்பத்தெட்டாவது நாள் முதல் மைல்கல் தாண்டி விட்டீர்கள். சிகரெட் பழக்கம் நம்முடன் அஞ்சு வருஷம் தேங்குகிறது என்று டைம் பத்திரிக்கையில் படித்தேன். அதாவது சிகரெட்டை நிறுத்துனஅஞ்சு வருஷத்துக்குள் ஒரு சிகரெட் பிடித்தாலும் மறுதினமே பழைய ஞாபகம் உசுப்பப்பட்டு பத்தோ, இருபதோ வழக்கமான கோட்டாவுக்கு போய்விடுவீர்கள். அஞ்சு வருஷம் தாண்டிவிட்டால் பழக்கம் போய்விடுகிறது”

இந்த எழுத்தாளர் யார் என கண்டுபிடித்து விட்டீர்களா? அவரை பற்றிய சில குறிப்புகள் :

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் இவரும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள்.

கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று இவர் தொடாத துறைகளே இல்லை!

தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இவரின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற ‘வாஸ்விக்’ விருது பெற்றார்.

இவரது பல கதைகள் படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. மேலும், இவர் பல திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.


இவர் யார் என்பதை கண்டுபிடித்திருந்தால், உங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

இவர் - எழுத்தாளர் "கலைமாமணி" சுஜாதா ரங்கராஜன்