J.K.Rowling லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
J.K.Rowling லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 மார்ச், 2020

கதை கதையாம் காரணம்

இங்கிலாந்து நாட்டில் பிறந்த அந்த பெண்ணுக்கு, சின்ன வயதிலேயே புத்தகங்களை தேடித்தேடி வாசிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவரது எழுத்து ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவரது பள்ளி ஆசிரியர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வழிகாட்டினர். ஆனால்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் நிராகரிக்கப்பட்டார். அவமானத்தில் கூனிக் குறுகிப்போய், வீட்டைவிட்டு வெளியில் வருவதைப் பல நாட்கள் தவிர்த்தார்.

பின்னர் தன்னைத்தானே தேற்றிக்கொண்ட அவர், எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கத் தயாரானார். தனக்குள் இருந்த எழுத்தாற்றல் ஆர்வம் காரணமாக ஆங்கில இலக்கியம் படிக்க அவருக்கு அதிக ஆசை. தனது ஆர்வத்தை அவர் தயங்கியபடி சொன்னபோது, ஏழ்மையான பின்னணி கொண்ட அவரது பெற்றோர், ‘‘ஆங்கில இலக்கியம் சோறு போடாது. பிரெஞ்சு மொழி படித்தால் ஓர் அலுவலக உதவியாளர் வேலையாவது கிடைக்கும்’’ என்று வாதிட்டனர்.


வேறு வழியின்றி எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில், பிரெஞ்சு மற்றும் செவ்வியல் இலக்கியப் படிப்பில் சேர்ந்தார். சில நாட்களிலேயே தனக்குப் பொருத்தமில்லாத படிப்பில் சேர்ந்ததை நினைத்து நொந்துபோனார். பி.ஏ பட்டம் பெற்ற பின்னர் லண்டன் மாநகருக்குச் சென்று, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் ஆராய்ச்சி உதவியாளர் பணியில் சில மாதங்கள் செயல்பட்டார்.

ஒருமுறை லண்டனுக்குச் செல்வதற்காக மான்செஸ்டர் ரயில் நிலையம் சென்றார். ரயில் வர 4 மணி நேரம் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. காத்திருந்த வேளையில், அவருக்கு ஒரு புத்தம் புதிய சிந்தனைக் கீற்று பளிச்சிட்டது. ஒரு முழு நீளத் திரைப்படம்போல் உருவான அந்தக் கதைச் சித்திரம் அவருக்குள் புதிய உணர்வலைகளை எழுப்பியது. வீட்டுக்கு வந்த உடன் அதனைப் பக்கம் பக்கமாக எழுதத் தொடங்கிவிட்டார்.


அவர் தனது நாவலை எழுதத் தொடங்கிய நேரத்தில், அவரது அம்மாவின் உடல் நலம் மோசமானது. தன்னை உயிருக்கு உயிராக நேசித்து, அரவணைத்துப் பாதுகாத்துவந்த தனது தாயாரின் மறைவு வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டது. அவரால் வேலைக்கும் செல்ல முடியவில்லை, எழுத்துப் பணியையும் தொடர முடியவில்லை.

ஒரு மாற்றத்துக்காக போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள போர்டோ நகருக்குச் சென்று, அங்கு ஆங்கில ஆசிரியராக இரவு நேரப் பணியில் சேர்ந்தார். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதித் தள்ளினார். அங்கு, தான் சந்தித்த, தன்னைவிட வயதில் குறைந்த இளைஞர் ஒருவரை மணந்துகொண்டார். மகள் பிறந்தாள். மண வாழ்க்கை நீடிக்கவில்லை. கணவரால் துன்புறுத்தப்பட்டு, துரத்தப்பட்டார். மீண்டும் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார்.

இங்கிலாந்திலும் உதவுவதற்கு யாரும் இல்லை. தந்தை மறுமணம் செய்துகொண்டு போய்விட்டார். தங்கையாலும் பெரிய உதவி செய்ய முடியவில்லை. பழைய நண்பர்கள் சிலர் சிறிதளவு பண உதவி செய்திட முன்வந்தபோதும், அதனை கைநீட்டி வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை. கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் தாய்மார்களுக்கு அரசாங்கம் தரும் சொற்ப உதவித்தொகைக்கு விண்ணப்பித்து, தனது கைக் குழந்தையுடன் போராட்ட வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

 தனது முழு சக்தியையும் திரட்டி முதல் பாகத்தை எழுதி முடித்தார். தனக்கு முழு திருப்தி ஏற்படும் வரை அதனை மெருகேற்றி, மிகுந்த நம்பிக்கையோடு பதிப்பகத்துக்கு அனுப்பிவைத்தார். ‘பதிப்பிக்கத் தகுந்ததல்ல’ என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பப்பட்டது அந்த நாவல்.  11 பதிப்பகங்கள் நிராகரித்த நாவலை, மனம் தளராமல் 12-வது பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்.

பதிப்பாசிரியர் படிக்கத் தொடங்கியபோது, அவரது 8 வயது மகளும் அதனைப் படிக்கத் தொடங்கினார். அந்தச் சிறுமி, அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்கத் தருமாறு தனது அப்பாவிடம் கெஞ்சியபோது அந்த நாவல் குழந்தைகளைக் கவரும் என்று பதிப்பாசிரியர் புரிந்துகொண்டார். அவரை அழைத்து பதிப்பு ஒப்பந்தம் போட்டார். எதிர்பாராத மாபெரும் வரவேற்பைப் பெற்றன ஹாரி பாட்டர் நாவல்கள்

எழுத்தின் மூலமாக மட்டுமே 6,000 கோடி ரூபாய்க்கும் மேலாகச் சம்பாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார் உலகின் முதல் பில்லியனர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங்.