திங்கள், 23 மார்ச், 2020

ஆசிரியரிடம் வாங்கிய திட்டு

அவர் திரைத்துறையில் மிகவும் பிரபலமானவர். செட்டிநாட்டு கிராமம் ஒன்றில் ஒரு விழாவிற்கு பேச்சாளராக அவரை அழைத்திருந்தார்கள். அவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டார்.

இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால், அமராவதிபுதூர் என்ற கிராமத்தை தாண்டிதான் செல்ல வேண்டும். இந்த கிராமத்தில் உள்ள குருகுலம் ஒன்றில்தான் அவர் படித்தார். மகாத்மா காந்தியே ஆசீர்வாதம் செய்யப்பட்ட குருகுலம் அது.

இந்த கிராமத்திற்குள் கார் நுழைந்தது. அப்போது தான் படித்த பள்ளியை அங்கு பார்த்தார். உடனே காரை நிறுத்த சொல்லிவிட்டார். காரை விட்டு கீழே இறங்கி அந்த பள்ளியின் வாசலில் நடுரோட்டில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டார்.

 அங்கிருந்தவர்களுக்கெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. பள்ளியில் இருந்தவர்கள், தெருவில் போனவர்கள் எல்லாம் அவரை பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றனர். விழாவுக்கோ நேரம் ஆகி கொண்டே இருந்தது. உடன் வந்தவர்கள் கேட்டார்கள், "என்னாச்சு.. ஏன் இப்படி உட்கார்ந்துட்டீங்க?" என்றனர். அதற்கு அவர், "இல்லை.. நான் இங்க படிக்கும்போது என் வாத்தியார், நீ உருப்பட மாட்டே... உருப்பட மாட்டே...ன்னு எப்பப் பார்த்தாலும் சொல்லிட்டே இருந்தார்... இப்போ நான் உருப்பட்டேனா, இல்லையா? எனக்கு தெரியலையே..." என்றார்.

இதுக்கு என்ன பதில் சொல்வதென்றே யாருக்கும் தெரியவில்லை. திரும்ப திரும்ப "நான் உருப்பட்டுட்டேனா.. இல்லையா"... என்று கேட்டு கொண்டே இருந்தார். அவர் இப்படி பிடிவாதம் பிடிப்பது ஊர்முழுக்க தெரிந்துவிட்டது. சிலர் ஓடிப்போய் அவருக்கு பாடம் நடத்திய ஆசிரியரிடமே தகவல் சொன்னார்கள். உடனே வாத்தியாரும் பள்ளியை நோக்கி வந்தார். அவ்வளவு நேரம் ரோட்டில் உட்கார்ந்து சத்தமாக வாத்தியாரை பற்றி பேசிக் கொண்டிருந்தவர், தூரத்தில் ஆசிரியர்  வருவதை பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தார். வாத்தியார் கிட்ட வர வர கை கால் எல்லாம் வெடவெடவென உதறியது.

வாத்தியார் கிட்ட வந்து நின்றதும், தன் கைகளை பவ்யமாக கட்டிக் கொண்டார். இப்போது வாத்தியார் பேசினார், "என்னப்பா... முத்து.. ஏன் இப்படி கீழே உட்கார்ந்துட்டு இங்கே சின்ன பிள்ளை மாதிரி என்ன பண்ணிட்டு இருக்கே?" என்றார். அவர், "ஒன்னுமில்லீங்க ஐயா...." என்றார்.

அதற்கு வாத்தியார், "இல்லையே... உன் சமாச்சாரம் வந்து சொன்னார்கள். நான் உன்னை சின்ன வயசுல உருப்பட மாட்டேன்னு சொன்னதைதானே கேட்டே? உன் ஆசிரியர் நான். உன் மேல் உரிமை எடுத்து என்னை தவிர வேறு யார் பேசமுடியும்? ஆசிரியர் திட்டினாலும் பெற்றோர் திட்டினாலும் அது பலிக்காது. அது உங்கள் நல்லதுக்காகத்தானே தவிர வேறு எதுக்காகவும் இல்லை. உன்னை நினைச்சு தினம் தினம் நான் பெருமைப்பட்டுட்டு இருக்கேன். அங்க பார்... விழாவுக்கு நீ வரப்போறன்னு... உனக்காக ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்காங்க. எத்தனை பேர் உன் பேச்சை கேட்க குவிஞ்சு கிடக்கிறாங்க... முதலில் விழாவுக்கு போ... நானும் உன் பேச்சை கேட்க பின்னாலயே வர்றேன்" என்றார்.


ஆசிரியர் பேச பேச அவருக்கோ புல்லரித்து போனது. விளையாட்டுக்காக அப்படி கேட்டிருந்தாலும், தன் ஆசிரியரை நேரில் பார்த்ததும், அவருக்கு உரிய மரியாதை அளித்த விதத்தை கண்டு எல்லோருமே திகைத்து நின்றார்கள். மளமளவென பேசி கொண்டிருந்தவர், தன் ஆசிரியரிடம் வாயடைத்து நின்றதையும் கவனித்து கொண்டு நின்றார்கள். கடைசியில் விழாவுக்கு கிளம்பி செல்லும்போது தன் ஆசிரியரின் கால்களை தொட்டு ஆசீர்வாதம் வாங்கி சென்றதையும் மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டு நின்றார்கள்.

அந்த வாத்தியாரால் "முத்து" என அழைக்கப்பட்டவருக்கு பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருந்து வந்தது. அவ்வாறு சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்கு தத்துக் கொடுக்கப்பட்டார். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். ஆனால் நடிப்பு அவருக்கு கை கொடுக்கவில்லை.

பிறகு நண்பர் ஒருவரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளியான திருமகள் என்ற பத்திரிகையில், 'பிழை திருத்துநர்' வேலை கேட்டுச் சென்றிருந்தார் அவர். நேர்காணலின்போது, அந்த பத்திரிகையின் அதிபர், 'உங்கள் பெயரென்ன?' என்று கேட்டிருக்கிறார்.

அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதிலும் 'தாசன்' என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை தான். கிடைத்த சில வினாடிகளில் 'கண்ணதாசன்' என்று பதில் கூறினார். முத்தையா கண்ணதாசன் ஆனது இப்படித்தான்.

கருத்துகள் இல்லை: